டார்டரூ - வீழ்ந்த தூதர் சிறை

ஷியோல்/ஹேடீஸ் மற்றும் கெஹன்னாவை முன்னர் ஆராய்ந்தோம். நரகமென மொழிபெயர்க்கப்பட்ட மற்றொரு வார்த்தை "டார்டரூ" ஆகும். இது வேதாகமத்தில் ஒரே ஒருமுறைதான் வருகிறது. இதன் அர்த்தமென்ன?
"பாவம் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்" (2பேதுரு 2:4).
--- இங்கே "நரகத்திலே தள்ளி" என்ற முழு சொற்றொடரும் "டார்டரூ" என்ற ஒரே மூல கிரேக்க வார்த்தையின் மொழியாக்கம் ஆகும்.
சில தேவதூதர்கள் தமது உயர் கண்ணியத்தில் இருந்து வீழ்ந்து தகுதியற்ற அவமான நிலைக்கு ஆளானதையும், அதனால் தேவன் அவர்களை கீழ்நிலைப்படுத்தினதையும் அது குறிக்கிறது.
விழுந்துபோன தூதர்களையும், பாவிகளையும் நித்திய காலமாக பிடித்துவைக்க ஒரு பாதாள நரக உலகம் இருக்கிறது என்று பிரசங்கிக்கும் பொருட்டு சிலர் இந்த வசனத்தை தவறாக பயன்படுத்துவது உண்டு. ஆனால், வசனம் நமக்கு என்ன காண்பிக்கிறது?

  • இங்கே மனிதர்கள் யாருமில்லை! தேவதூதர்கள் மட்டுமே.
  • அவர்கள் அந்தகார சங்கிலிகளால் கட்டப்பட்டுள்ளனர். அந்தகாரம், அதாவது இருள்.. இருட்டு! அப்படியெனில் பற்றியெரிகிற அக்கினி அங்கில்லை.
  • விழுந்துபோன தூதர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஒருவிதமான தடையையே சங்கிலிகள் அடையாளப்படுத்துகின்றன. என்னவித தடை அது? இந்த தேவதூதர்கள் நோவாவின் காலத்தில் மனித வடிவமெடுத்து பெண்களை ஏமாற்றினார்கள். எனவே தேவன் அவர்களை கண்ணுக்குப் புலப்படாதவர்களாக ஆக்கிவிட்டார். அதுவே இருட்டின் சங்கிலிகளின் தடை!
  • "நியாயத்தீர்ப்புக்கென வைக்கப்பட்டவர்களாக" அவர்களின் இந்த நிலை தற்காலிகமானது என்பது தெளிவாகவே தெரிகிறது. நிச்சயம் நித்தியமானதல்ல.

இறுதியில் - தேவன் வழி அல்லது சாத்தான் வழி - இரண்டில் ஒன்றை தாமாக தெரிந்துகொள்ளும்படி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
சொல்லப்போனால், மகிமைப்படுத்தப்பட்ட திருச்சபையானது அவர்களை விசாரணை செய்து நியாயந்தீர்க்கும் என்கிறது வேத வசனம் (1கொரி 6:3).

மேலும் படிக்க: அழுகையும் பற்கடிப்பும்