அழுகையும் பற்கடிப்பும்

கருப்பொருள் வசனம்: "இதோ, உன்னைப் புடமிட்டேன், ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் சூளையிலே உன்னை சோதித்தேன்" (ஏசாயா48:10).

"நரகம்" என தமிழ் வேதாகமங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள - "ஷியோல்"/”ஹேடீஸ்", "கெஹன்னா" மற்றும் "டார்டரூ" - என்ற மூல வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். ஆனால், அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம் பற்றி இயேசு பேசினாரே, அது என்ன?
மொத்தம் ஏழு வசனங்களிலே இந்த "அழுகையும், பற்கடிப்பும்" வாசகத்தை காண்கிறோம் - மத்தேயு 8:12; 13:42,50; 22:13; 24:51; 25:30; லூக்கா 13:28.

  • இந்த ஏழு வசனங்களிலுமே இயேசு இந்த சொற்றொடரை உவமைகளிலும், அடையாள கூற்றுகளிலும் மட்டுமே பயன்படுத்துகிறார்; எனவே இது ஒரு அடையாளமே என்பது தெளிவாகிறது.
  • சந்தர்ப்ப சூழலை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. எனினும் எல்லா இடங்களிலும் அதன் பொதுவான அர்த்தமானது என்னவெனில் தேவனின் பார்வையில் தவறு செய்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட காலம்வரை நீடிக்கும் ஒரு குறிப்பிட்ட தண்டனை/சோதனைக்காலம் என்பதே ஆகும்.
  • மத்தேயு 13:42, 50 வசனங்களில் அழுகையும், பற்கடிப்பும் அக்கினிச்சூளைக்கு ஒப்பிடப்படுகிறது. சூளைக்குகையானது திருமறையின் பல்வேறு பகுதிகளில் சோதிக்கப்படுவதற்கும், புடமிடப்படுவதற்குமான ஒரு இடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது (ஏசாயா 48:10, நீதிமொழிகள் 17:3).
  • மற்ற வசனங்களில் அழுகையும், பற்கடிப்பும் என்பது புறம்பான இருளாக (தேவனின் தயவற்ற நிலையாக) வர்ணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மத்தேயு 8:12-இல் புறஜாதியினர் பலர் தேவனின் இராஜ்யத்தில் உயர்பதவிகளுக்கு வருவார்கள் என்பதையும், அது எங்ஙனம் கிறிஸ்துவை நிராகரித்த இஸ்ரவேலருக்கு மன வேதனையை உண்டாக்கும் என்பதையும் விளக்குவதற்கு, அடிப்படையில் ஒரு தண்டனை என்ற அர்த்தத்தில் இயேசு "அழுகையும், பற்கடிப்பும்" என்ற பதங்களை பயன்படுத்துகிறார்.

மேலும் படிக்க: யுகங்களுக்கோர் உவமை - யார் அந்த ஐசுவரியவான்?