யுக மாற்றம்

 கருப்பொருள் வசனம்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி 3:1)

கிறிஸ்து பூமி திரும்பும்பொழுது மரித்த யாவரும் உயிர்த்தெழுவார்கள் என்று வேதாகம தீர்க்கதரிசனங்கள் உரைக்கின்றன. மேலும் இரண்டுவகையான (முதலாம் மற்றும் இரண்டாம்) உயிர்த்தெழுதல்கள் இருக்கும் என்றும் வேதாகமம் முன்னறிவிக்கிறது. சரி, நடக்கவிருக்கும் நிகழ்வுகளின் வரிசையை நாம் இப்போது காணலாம்.

1. முதலாம் உயிர்த்தெழுதலும், பேமா ஆசன (Bema Seat) நியாயத்தீர்ப்பும்

முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கள் (கிறிஸ்துவின் தெரிந்துகொள்ளப்பட்ட திருச்சபையார்) பேமா ஆசன நியாயத்தீர்ப்பில் பரிசுகளை பெறுவார்கள்.
“ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது பயனற்றவைக்காகவாது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு (கிரேக்கம்: பேமா Bema) முன்பாக வெளிப்படவேண்டும்”. 2கொரிந்தியர் 5:10.
பேமா ஆசனம் (Bema Seat) என்பது பண்டைகால ஒலிம்பிக் விளையாட்டில் வழக்கத்தில் இருந்த ஒரு இருக்கை ஆகும். பந்தய முடிவுகோடு அருகிலிருந்த இந்த பேமா இருக்கையில் போட்டிகளின் நடுவர் அமர்ந்து, வெற்றிபெற்றவர்களுக்கு தரவரிசையில் பதக்கங்களை பரிசளிப்பது வழக்கம்.

இயேசு இதனை தாலந்துகளின் உவமையில் விவரிக்கிறார்- “பிரபுவாகிய ஒருவன் ஒரு இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான். புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துதாலந்து திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.. அவன் இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய தாலந்தினால் பத்து தாலந்து ஆதாயம் கிடைத்தது என்றான். எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய தாலந்தினால் ஐந்து தாலந்து ஆதாயம் கிடைத்தது என்றான். அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்” (லூக்கா 19:12-19).

ஆம், இயேசு தாம் வாக்களித்தபடியே, பட்டணங்கள் மேலும், தேசங்கள் மேலும் அதிகாரம் செலுத்தும் ஆட்சியுரிமைப்பரிசுகளை தன்னை உண்மையாய் பின்பற்றினவர்களுக்கு பகிர்ந்தளிக்கவிருக்கிறார் - ‘ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புச் செங்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்’. வெளி 2:26-27.

இந்த பேமா ஆசன நியாயத்தீர்ப்பை (Bema Seat Judgment), மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்புடன் (Great White Throne Judgment - வெளி 20:11-15, மத் 25:31-46) நாம் குழப்பிக்கொள்ள கூடாது.

2. பெரும் உபத்திரவத்தின் காலமும், அர்மகெதோன் யுத்தமும்

இதற்கிடையில், பூமியில் பெரும் துன்பத்தின் காலம் வரும்.
     யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும். தானியேல் 12:1.
உலகநாடுகள் எருசலேமுடன் போர் தொடுக்க, அர்மகெதோன் யுத்தத்தில் (Battle of Armageddon) நிலைமை உச்சகட்டத்தை அடையும்.
     எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல தேசங்களையும் கூட்டுவேன். சகரியா 14:2.
அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே பூலோகமெங்குமுள்ள இராஜாக்களைக் கூட்டிச் சேர்த்தான். வெளி 16:16.

3. தற்போதைய யுகத்தின் முடிவு

தற்போதைய உலகில் பெரும் சக்திகளான அரசியல் நிறுவனங்களும், தவறான மத அமைப்புகளும் அழிக்கப்படும் - "அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது ..மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டார்கள்." வெளி 19:20.

நோவாவின் காலத்து பெரும் வெள்ளத்தில் நடந்தது போலவே இன்று நாம் காணும் உலகம் அழிந்து போகும்.
"அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்." 2பேதுரு 3:10-12.
“பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்தது. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்கியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்ட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது”. 2பேதுரு 3:5-7.
இது தற்போதைய யுகத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த யுக அஸ்தமனமானது அடுத்து யுகமான ஆயிர வருட யுகத்தின் விடியலுக்கு வழிவகுக்கிறது.

4. ஆயிரவருட யுகமும், சாத்தான் சிறையடைப்பும்

இரண்டாவது உயிர்த்தெழுதலுக்கு வழிவகுக்கும் வகையில் அடுத்த யுகத்தை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் தொடங்கி வைக்கும். அந்த ஆயிரவருட யுகத்தில் முதன்முதலாக நடக்கவிருக்கும் அதிமுக்கியமான சம்பவம் என்னவெனில், சாத்தான் சிறையடைக்கப்பட்டு தன் அதிகாரத்தை இழந்துபோவதே ஆகும்.
"பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை.ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்தான்." வெளி 20:2.

5. ஏதேன் தோட்ட பரிபூரணநிலை அடைய பூமியின் மறுசீரமைப்பு

"பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன், முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின." வெளி 21:1. "இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன், முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை." ஏசாயா 65:17. “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” ரோமர் 8:20-21.

6. இரண்டாம் உயிர்த்தெழுதலும், நியாயத்தீர்ப்புச்சோதனையும்

மற்ற மனிதர்கள் (‘அநீதிமான்களாகிய' அவிசுவாசிகள்) அனைவரும் (மரபணு பாவமில்லாமல்) குறைவற்ற மாம்ச சரீரத்தில் ஒரு சோதனைக்காக (கிரேக்கம்: க்ரைசீஸ் / Krisis) உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (யோவான் 5:29). இவ்வசனத்தில் ‘க்ரைசீஸ்' என்ற மூல கிரேக்க வார்த்தை பல தமிழ் வேதாகமங்களில் 'ஆக்கினை' என்று தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அதற்கு 'நியாயத்தீர்ப்பு / சோதனை' என்றுதான் பொருள்.

குறிப்பு: வெளி 20:5 வசனத்தின் போலியான முதல் பகுதி இவ்வாறு கூறுகிறது ‘மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை’. ஆனால் இந்த பகுதி வேதாகமத்தின் ஆதி மூலப்பிரதிகளில் இல்லை. எனவே சில வேதாகம மொழிப்பெயர்ப்புகள் அப்பகுதியை அடைப்புக்குறிக்குள் () காண்பிப்பது வழக்கம். (உதாரணம்: NIV ஆங்கில வேதாகமம்)
ஆம், இடைக்காலங்களில் (medieval times) யாரோ அதை செருகியுள்ளார்கள். ஆயிரவருட ஆரம்பத்திலேயே மரணமடைந்த மற்றவர்கள் நிச்சயம் உயிர்த்தெழுவிருக்கிறார்கள். ஏனெனில் அப்படி அவர்கள் உயிர்த்தெழவில்லை என்றால், கிறிஸ்துவும் அவரது திருச்சபையும் வெறுமையான பூமியை ஆண்டு கொண்டிருப்பார்கள்!

சரி, அப்படியெனில் மற்ற மனிதர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனையை (க்ரைசீஸ் krisis) எதிர்கொள்ள உயிர்த்தெழுகிறார்கள். என்னதான் சோதனை அது?

மேலும் படிக்க: நியாயத்தீர்ப்பு நாள்