படி, மீன் பிடி, கிறிஸ்து போல் ஆகு!

Christ, Mary and Martha

 கருப்பொருள் வசனம்: உங்கள் நம்பிக்கை குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 1பேதுரு 3:15. இயேசு அவர்களை நோக்கி, "என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்," என்றார். மாற்கு 1:17. "கர்த்தரால் அவர் சாயலில் மறுரூபப்படுகிறோம். இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாக நாம் இரக்கம் பெற்றிருக்கிறோம்." 2கொரி 3:18 – 4:1.

நாம் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்போது, தேவன் மேலுள்ள விசுவாசத்தை நிரூபித்து, பரிசுத்தம் அடைய உதவும் நம் ஆசாரிய கடமையை நிறைவேற்றுகிறோம் என்ற விசயங்களை பார்த்தோம். மேலும் இராஜ்ய நற்செய்தியின் பொருட்டு கிறிஸ்துவிற்கு வரும் பாடுகளில் நாம் பங்கெடுப்பதுதான் அவருடைய இராஜ்யத்தின் மகிமையிலும் அதிகாரத்திலும் நமக்கு ஓர் பங்கை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் உணர்ந்தோம். சுவிசேஷத்திற்காக வாழும் ஓர் வாழ்வே மனுக்குலத்திற்கு உண்மையான நன்மை செய்து வாழ்வதற்கான ஒரே வழி என்பதையும், மேலும் பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரித்தாலும், இராஜ்யத்தில் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் அவர்களது சீரமைப்பை எளிதாக்கும் வகையில் அதை நினைவுகூருவார்கள் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உலகத்துடன் பகிர்வதன் மூலம் தேவன் மற்றும் மனுக்குலம் மீது காட்டவேண்டிய அன்பு என்னும் பிரதான கட்டளையை நாம் நிறைவேற்றுகிறோம் என்பதையும் கற்றோம். இவை அனைத்தும் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்படி தேவன் நம்மை கேட்கும் நோக்கத்தின் பல பரிமாணங்கள் ஆகும். நற்செய்தியின் ஓட்டத்திற்கான மற்றொரு முக்கியமான குறிக்கோளை இப்போது நாம் பார்க்கலாம்.

வேதவசனம் படி, தேவனின் அறிவில் வளரு!

நாம் நற்செய்திப் பணி செய்யும்போது, கேள்விகளையும், சந்தேகங்களையும், விவாதங்களையும் சந்திப்போம். அதனால் தேவனின் வார்த்தையை மேலும் ஆழமாக ஆராய்ந்து தினமும் அவரைப் பற்றி புதிய விசயங்களைக் கண்டுபிடிப்போம். கிறிஸ்துவிற்குள்ளான நம் சகோதர சகோதரிகளோடு ஐக்கியம் கொள்ளும்போதும் அதே விளைவுகள் நிகழும்.

உயர்நிலை பள்ளி கல்வி மட்டுமே பயின்ற ஒருவர் உயர்நிலை பள்ளி மட்டத்தில் ஆசிரியராக பாடம் கற்பிக்க முடியாது. ஆசிரியருக்கு ஆழமான பட்டதாரி கல்வி தேவை! அவ்வாறே, கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய இராஜ்யத்தைப் பற்றியும் அவிசுவாசிகளுக்கும் புது விசுவாசிகளுக்கும் கற்பிக்க நாம் ஆழமான அளவில் வேதாகமத்தை படிப்போம் .

தேவனின் நல்ல புத்தகம் வாழ்நாள் முழுவதும் பொக்கீஷம் அள்ளித்தரும் ஒரு புதையல்!

திருச்சபை மீன் பிடி!

சுவிசேஷ ஓட்டத்தின் இன்னொரு நோக்கம் தேவனுடைய வேலைக்கென தெரிந்துகொள்ளப்பட்ட திருச்சபையினரை உலகிலிருந்து நம்மால் முடிந்தவரை வெல்வதாகும். இயேசு கிறிஸ்து நம்மை தேவன் தெரிந்துகொண்ட மீன்களை பிடிக்க அனுப்புகிறார்.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைச் சேர்ப்பதில் நாம்தான் அவருடைய காரியஸ்தர்கள். ஒருவன் இயேசுவைப் பின்தொடர்ந்தால், அவன் மக்களைப் பிடிக்கிறவானாய் மாறுகிறான்.

     இயேசு அவர்களை நோக்கி, "என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்," என்றார். மாற்கு 1:17.

அதனால்தான் பவுல் எழுதுகிறார்: "நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.   யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன்.   நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்." 1கொரிந்தியர் 9:16, 19-23.

கிறிஸ்து போல ஆகு!

நாம் எல்லோரும் கிறிஸ்துவின் சாயலில் மாற விரும்புகிறோம், இல்லையா? - சுவிசேஷ ஓட்டம் ஓடுவதே கிறிஸ்துவைப் போல மாற, அவர் சாயலில் மாற்றியமைக்கப்பட வேதாகமம் நம் முன்வைக்கும் ஒரே வழியாகும்.

பவுல் தெளிவுபடுத்துகிறார் – “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

நாங்கள் தேவவசனத்தை இலாபத்திற்காக பேசாமல், தேவனால் அருளப்பட்டபிரகாரமாக, கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம். தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அவரது சாயலில் மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை." 2கொரிந்தியர் 2:14-17, 3:4-6, 17-18, 4:1.

ஆம், தேவனை அறிகிற அறிவின் வாசனையை எல்லா இடங்களிலேயும் பரப்பும் புது உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக நம்மை கிறிஸ்துவிற்குள் தேவன் வழிநடத்துகிறார். அவருடைய ஊழியத்தை மென்மேலும் நாம் செய்யச்செய்ய கிறிஸ்துவின் சாயலில் மகிமையின்மேல் மகிமையடைந்து நாம் மறுரூபமாக்கப்படுகிறோம் என்று வேதம் சொல்கிறது.

சுவிசேஷ ஓட்டம் ஓடும்போது நாம் சாதிக்கும் காரியங்கள் உண்மையிலேயே பயனுள்ளவையாகயும் அற்புதமானவையாகவும் உள்ளன. மேலும் படிக்க : பரம அழைப்பின் ஓட்டத்தில் நம்முடன் ஓடுபவர்கள்.