मनुष्य की छुडौती

 கருப்பொருள் வசனம் “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல , கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் ” 1கொரிந்தியர் 15:22.

1) ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் ரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எங்ஙனம் வாக்களிக்கக்கூடும்?
இது புதிய ஏற்பாட்டுக் காலத்திலே புதிதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி அல்ல. ஆதியாகமத்திலேயே கடவுள் இதைத் தீர்க்கதரிசனமாக உரைத்தார்; கடவுள் சாத்தானிடம் சொன்னதாவது: “அவர் (ஸ்திரியின் வித்து) உன் தலையை நசுக்குவார்” (ஆதியாகமம் 3:15). கிறிஸ்துவே இங்கு வாக்களிக்கப்பட்ட வித்துவாகக் குறிப்பிடப்படுகிறார். ஆதாமின் இனத்தின் மீது மரணத்தைக் கொணர்ந்த சாத்தான், தான் வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணினான். ஆனால், சாத்தானை முறியடிக்கவும், ஆதாமையும் அவன் பிள்ளைகளையும் விடுவிக்கவும் ஸ்திரியின் வித்தாக (அதாவது, ஸ்திரியினிடத்தில் பிறந்த மனிதனாக) கிறிஸ்துவை அனுப்புவேன் என்று கடவுள் கூறினார்.

2) கடவுள் மனுக்குலத்திற்கு என்னதான் வாக்களிக்கிறார்?

  • வேதாகமத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்:
    அவர்களை (மனுக்குலத்தை) நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே , உன் சங்காரம் எங்கே?” (ஓசியா 13:14).
  • இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார்:
    எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது” (1தீமோத்தேயு 2: 4-6).

தீர்க்கதரிசனத்திலும், அதன் நிறைவேற்றத்திலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வார்த்தைகளாவன :

அ) ‘மீட்கும் பொருள்’
            ஆ) ‘எல்லாரையும்’
            இ) ‘இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது’
            ஈ) ‘இரட்சிக்கப்படவும் , சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’

3) ‘மீட்கும் பொருள்’ என்றால் என்ன?
‘Antilutron’ என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கமே ‘மீட்கும் பொருள்’. ‘ஒரு ஈடான, ஒத்த கிரயம்’ என்பதே அதன் பொருள். கடவுளது உலகளாவிய சட்டமாக இந்த ஈடு கிரயக் கருத்தாக்கத்தை நாம் காண்கிறோம். இஸ்ரவேலுக்குரிய மோசேயின் சட்டப் பிரமாண உடன்படிக்கையில் இது எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.
“ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்… பழி கொடுக்க வேண்டும்” (யாத்திராகமம் 21: 23–25).
முன்னர் நாம் கண்டபடி, (குறையற்ற) நிறை மனிதரான ஆதாம் பாவம் செய்தார். அவர் மீதும், அவர் மூலமாக வந்ததும் வரக்கூடியதுமான வம்சாவழி வாரிசுகள் மீதும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரணத்திலிருந்து ஆதாமின் ஜீவனை மீட்க ஒரு ஈடு கிரயம் (மீட்கும் பொருள்) செலுத்த அவசியமேற்பட்டது --- அதுவே இன்னொரு (குறையற்ற) நிறை மனிதனின் ஜீவன்.

4) எந்த மனிதானவது இந்த ‘மீட்கும் பொருளைச்’ செலுத்தியிருக்கக் கூடுமா?
கூடாது. ஏனெனில் , அனைத்து மனிதர்களும் ஆதாமின் குழந்தைகளே; (நாமனைவரும்) பாவிகளாகவே பிறந்தவர்கள் (சங்கீதம் 51:5). முன்னர் நாம் கண்டதுபோல, பாவம் நமது மரபணுவிலேயே உள்ளது. மீட்கும் பொருளாகக் குறையற்ற ஒரு மனிதனின் ஜீவன் அவசியப்படுவதால், ஈடு கிரயத்தை (மீட்கும் பொருளை) நாம் செலுத்த முடியாது; ஏனெனில், நாமனைவரும் குறைவுடனேயே பிறந்தவர்கள்.
ஆகவேதான் சங்கீதக்காரன் கூறுகிறான்: “ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் ‘மீட்கும் பொருளை’ தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே” (சங்கீதம் 49 :7-8).

5) அப்படியெனில், ஆதாமுக்கான மீட்கும் பொருளைச் செலுத்தியது யார்?
இயேசுவே ஆதாமுக்கான மீட்கும் பொருளைச் செலுத்தினார். ஏனெனில், அவர் மோட்சத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு (குறையற்ற) நிறை மனிதர்; அவர் தன்னை பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகின”வருமாகக் காத்துக் கொண்டார் (எபிரேயர் 7:26).
ஆதாமை மீட்கும் பொருளாக இயேசு தம்மையே கொடுத்தார்; ஆதாமிற்குப் பதிலாகத் தன் ஜீவன் கொடுத்தார்; அதன்மூலம் ஆதாமிற்கும், அவனது வழித் தோன்றல்கள் அனைவருக்கும், அதாவது மனித இனத்திற்கே இரட்சகரானார்.
இந்த மீட்கும் பொருளே ஏதேன் தோட்டத்திலே விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து ஆதாமையும் அனைத்து மனுக்குலத்தையும் நியாயப்படி விடுவிப்பதற்குரிய வழிமுறையாயிற்று.

6) ஆதாமை விடுவிக்கும் இந்தப் பிரம்மாண்டமான பணியைக் கடவுள் எப்படித்தான் சாதித்தார்?

  • ஆதாம் பாவம் செய்த உடனேயே, கடவுள் தமது பேரிரக்கத்தினாலும், அன்பினாலும் ஆதாமை விடுவிக்க ஒரு மீட்புத் திட்டத்தை ஏற்பாடு செய்தார்.(கிறிஸ்துவை அனுப்ப அவர் வாக்களிப்பதை ஆதியாகமம் 3:15-ல் கண்டோம்). மனுக்குலத்தை இரட்சிக்கக் கடவுள் தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார் (யோவான் 3:16). ஆதாமின் இனத்தை விடுவிப்பதற்காக ஆதாமுக்குப் பதிலாக மரிக்கவும், மீட்கும் பொருளைச் செலுத்தவும் இயேசுவை அனுப்பினார்.
  • தமது மனித வாழ்வுக்கு முன்னர், இயேசு தேவனின் “வார்த்தை”யாக இருந்தார். கடவுளின் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறுமானவர் இயேசுவே. எல்லாவற்றையும் அவர் மூலமாகவே கடவுள் படைத்தார் (கொலொசேயர் 1:15-16). கடவுளின் ஒரே குமாரன் என்று அவர் அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம். அத்தகையதொரு வல்லமையான ‘வார்த்தை’யை மேரியின் கருப்பையிலே கடவுள் உருமாற்றம் செய்து (இரட்சகர் எனப் பொருள்படும்) ‘இயேசு’ என்னும் நிறை மனிதராகப் பிறக்கச் செய்தார். நம்மெல்லாரையும் போல அவர் மரண தண்டனைக் குட்பட்டவராகப் பிறக்கவில்லை. அவர் விரும்பியிருந்தால் என்றென்றும் பூமிலேயே வாழந்திருக்கக்கூடும். ஆனால் ஆதாமை மீட்கும் பொருளைச் செலுத்த அவரே அந்த உரிமையை விட்டுக் கொடுத்தார்.

7) சிலுவையிலே இயேசு சாதித்ததென்ன?
தமது சிலுவை மரணத்தின் வாயிலாக மனுக்குலம் அனைத்தையும் இயேசு இரட்சித்தார்; நாம் முன்பு கண்டபடி அப்போஸ்தலர் பவுல் “எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து அவரே” என்று 1தீமோத்தேயு 2:3–6 வசனங்களில் குறிப்பிடுகிறார்.

  • யோவான் மிகத் தெளிவாகக் கூறுகிறார்: “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே ; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” ( 1யோவான் 2:2).
  • ஆம், இயேசு ஒவ்வொரு மனிதனுக்காகவும் மரணத்தை ருசித்தார் (எபிரேயர் 2:9).
  • ஆதாமிற்குப் பதிலாக மரித்ததன் மூலம், ஆதாமும் அவனது வழித் தோன்றல்கள் அனைவரும் வாழ்வதற்கு மற்றுமொரு ஜீவ வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்.
    “(ஒரே) மனுஷனால் (ஆதாமால்) மரணம் உண்டானபடியால் (ஒரே) மனுஷனால் (இயேசுவால்) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று” (1கொரிந்தியர் 15:21).
    ஒரே மனுஷனாலே (ஆதாமாலே) பாவமும்,பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால்,மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும்...” (ரோமர் 5:12).
    ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று” (ரோமர் 5:18).

இதுவே நற்செய்தி --- ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய பிரகடனப்படுத்தப்பட்ட அசலான நற்செய்தி இதுவே. ஆதாமினாலே பிறந்த ஒவ்வொருவருக்கும் இது நற்செய்தி. ஆகவேதான் இயேசுவின் பிறப்பு பற்றி அறிவித்த தூதன் கூறினான்: “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்கா 2:10).

8) இன்றைய திருச்சபைகள் எவ்வாறான நற்செய்தியைப் போதிக்கின்றன?
இன்றைய கிறிஸ்தவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள், பிறர் யாவும் என்றென்றும் எரி நரகத்தில் கிடப்பார்கள் என்று திருச்சபைகள் போதிக்கின்றன. அவ்வாறெனில், 95 சதவிகித மனிதர்கள் நரகத் தீயில் கிடப்பர் என்று அர்த்தமாகிறது. இது நற்செய்தியாகத் தொனிக்கிறதா? மேலும், இயேசுவின் பெயரையே கேட்டிராத கோடிக்கணக்கானவர்களின் நிலை என்ன?
இது ‘நீதியா’ அல்லது ‘நாங்கள் மட்டுமே’ என்ற மனோபாவமா? 95 சதவிகித மனிதர்களைச் சாத்தான் எரிநரகத்திற்குச் சம்பாதிக்கிறான், 5 சதவிகித நபர்களைக் கடவுள் மோட்சத்திற்கு சம்பாதிக்கிறார் எனில், யாருக்கு வெற்றி? கடவுளுக்கா அல்லது சாத்தானுக்கா? இந்தக் கணக்கை சிறு குழந்தைகூடப் போட்டுவிடும். ஆனால், வேதாகம உண்மை வேறானது என்பதை நமது ஆராய்ச்சி காட்டியுள்ளது.

9) அப்படியெனில், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர் உட்பட எல்லோரும் நித்திய ஜீவன் பெறுவார்கள் என வேதாகமம் சொல்கிறதா?
அல்லவே அல்ல. வேதாகமம் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் வேதாகமம் சொல்வதென்ன? இரண்டாம் முறையாகப் பூமியில் வாழ ஒவ்வொருவரும் உயிர்ப்பிக்கப்படுவர் என்று சொல்கிறது. ஆகவேதான், 1தீமோத்தேயு 2:3–6 வசனங்களில் அப்போஸ்தலர் பவுல் கூறுகிறார்:
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது” (1தீமோத்தேயு 2:4-6).
இங்கே நிகழ்வுகளின் வரிசைக் கிரமத்தைக் கவனிப்போம்:

  1. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்”:அதாவது, மீட்கப்பட்டு ஆதாமின் மரணத்தினின்று எழுப்பப்படவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.
  2. “சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்”: அதாவது, மரணத்தினின்று எழுப்பப்பட்ட பின்பு, கடவுள், கிறிஸ்து பற்றியும், நீதியைக் குறித்த சத்தியத்தைப் பற்றியும் அவர்களுக்கு முழுவதுமாக கற்றுக்கொடுக்கப்படும். ஏசாயா 26:9-ல் முன்னுரைக்கப்படுள்ள நியாயத்தீர்ப்பு நாள் அத்தகைய கல்வியை விளக்குகிறது.

ஆம். எல்லாருக்குமுரிய மீட்கும் பொருள் இயேசு கிறிஸ்து. “இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது” - வெகுசிலருக்கு மட்டுமே இன்றைய காலம் ஏற்ற காலம். மனிதரில் பெரும்பாலோருக்கு ஏற்ற காலம் உயிர்த்தெழுதலுக்குப் பின்தான் – நியாயத்தீர்ப்பின் காலத்தின்போது, அதாவது கடவுளின் இராஜ்யத்தின்போது (2தீமோத்தேயு 4:1).
கடவுளின் இராஜ்யம் என்றால் என்ன? நியாயத்தீர்ப்பு நாள் 24 மணி நேரம் மட்டும் தானே? இராஜ்யத்தில் எல்லோருக்கும் இலவச நுழைவு சீட்டா?

மேலும் படிக்க: மகா மறுசீரமைப்பின் காலம்

Site Search

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.

Member Access